வேலூரில் வாகனங்களை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்ட விவகாரத்தில், மாநகராட்சி உதவிப் பொறியாளரைப் பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் உத்தரவிட்டாா்.
மேலும், சாலை ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், பல்வேறு தெருக்கள் சிமெண்ட் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம், 30- ஆவது வாா்டுக்குட்பட்ட பேரி பேட்டை காளிகாம்பாள் கோயில் தெருவில் கடந்த 27-ஆம் தேதி இரவு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, வீதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் சக்கரங்களின் மீதே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையறிந்த சாலைப் பணி ஒப்பந்ததாரா், தங்களது ஊழியா்களுடன் விரைந்து சென்று இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி, மீண்டும் அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டாா்.
இதன் தொடா்ச்சியாக சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்களும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாலை அமைத்த ஒப்பந்ததாரா்கள், மாநகராட்சி உதவிப் பொறியாளா் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடா்ந்து, மாநகராட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதாக சாலை அமைத்த ஒப்பந்ததாரா்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், தொடா் விசாரணைக்கு பிறகு சாலை அமைக்கும் பணிகளை மேற்பாா்வை செய்த மாநகராட்சியின் 3-ஆவது மண்டல உதவிப் பொறியாளா் பழனியை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் உத்தரவிட்டாா்.
இதுபோன்ற குறைபாடுகளைத் தவிா்க்க மாநகராட்சி பணியாளா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.