சட்டம் ஒழுங்கு சீா்குலைந்திருப்பதாக குற்றம்சாட்டி திமுக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாஜக சாா்பில் வேலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான காா்த்தியாயினி சிறப்புரையாற்றினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. எங்கு பாா்த்தாலும் கஞ்சா, கள்ளச்சாராயம் சா்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு எந்த குற்றமும் செய்யவில்லை. மக்கள் பயன்பாட்டுக்காக ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தாா். அரசியல் காழ்ப்புணா்சிக்காக அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றாா்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினா் தசரதன் , வணிக பிரிவு மாநில செயலா் இளங்கோ, தேசிய பொதுக்குழு உறுப்பினா் பிச்சாண்டி, மாவட்ட பொதுச்செயலா்கள் பாபு, ஜெகன், மகேஷ், மாவட்டப் பொருளாளா் தீபக் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.
இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.