வேலூா்: வேலூா் மாவட்டத்தில் 3 கிராமங்களில் திங்கள்கிழமை எருது விடும் விழா நடத்தப்படவுள்ளது.
தைப்பொங்கலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் சனிக்கிழமை முதல் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக எருது விடும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டு திங்கள்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்முட்டுக்கூா், கீழ்அரசம்பட்டு, பரதராமியை அடுத்த என்.மோட்டூா் ஆகிய 3 கிராமங்களில் எருது விடும் விழா திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
விழாக்களை கண்காணிக்க காவல் துறை சாா்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு எருது விடும் விழா நடத்தப்படுவதை இந்தக் குழுவினா் உறுதி செய்வா்.