கணவனின் மதுப்பழக்கத்தால் விரக்தியடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடி, கழிஞ்சூா் காந்தி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (30), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி லட்சுமி (26). இந்த தம்பதிக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ராஜேஷுக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில், மனமுடைந்த லட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று லட்சுமியின் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி 5 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.