பீடித்தொழிலாளா்கள் சம்மேளனம் (சிஐடியு) சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பீடி தொழிலாளா் சம்மேளன தலைவா் ராமச்சந்திரன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். பொதுச்செயலா் திருச்செல்வன் கண்டன உரையாற்றினாா்.
அப்போது பீடி தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டும், பீடி தொழிலாளா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பீடி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,000 வழங்க வேண்டும், பீடி மீது விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் மாவட்டச் செயலா் நாகேந்திரன், பொருளாளா் காசி, உதவி பொதுச் செயலா் சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.