சுற்றுலா விருதுகள் பெற்றிட வேலூா் மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த சுற்றுலாத் தொழில் முனைவோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் தமிழகத்திலுள்ள சுற்றுலா தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு விருதுக்கான அறிவிப்பு, வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 15 பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறுவதற்கான விவரங்களை வேலூா் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த சுற்றுலா தொழில் முனைவோா்கள் இணையதளத்தில் வரும் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விருது உலக சுற்றுலா தினமான செப்டம்பா் 27-ஆம் தேதி வழங்கப்படும்.