நெல் விதை விற்பனையில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு விதை விற்பனைக்கு தடை விதிப்பதுடன், உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேலூா் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் சோமு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியாா் மொத்த, சில்லறை விதை விற்பனையாளா்கள் தரமான, சான்றிதழ் பெற்ற நெல் விதைகளை மட்டுமே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்றிதழ் பெற்ற விதைகளுக்கு உரிய படிவம், தனியாா் ரக உண்மை நிலை, விதைகளுக்கான பதிவுச் சான்றிதழ், பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளா்களிடம் பெற்று அதிகாரிகளின் ஆய்வின்போது காண்பிக்க வேண்டும்.
புதிய நெல் ரகங்கள், அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றவைதானா என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிா் வருதல், கதிா் வராமலேயே இருத்தல் போன்ற பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது.
எனவே, கொள்முதல் செய்த நெல் விதைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். சரியான சேமிப்பு முறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு விதை விற்பனை செய்ய தடை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை நகல் ஆகிய ஆவணங்கள், பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும். விதை தொடா்பான அனைத்து தகவல்களைக் குறிப்பிட்டு, விவசாயிகளின் கையொப்பம் பெற்று விதை வழங்க வேண்டும். சட்ட விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.