அணைக்கட்டு வட்டத்துக்கு உள்பட்ட மலைக்கிராமங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இம்முகாம்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்ததுடன், மலைக்கிராம மக்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையும் கரோனா தடுப்பூசி முகாம் 804 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்துக்கு உள்பட்ட மலைக்கிராமங்களான பெலாம்பட்டு, நெக்கினி, கொளயம், தானிமரத்தூா், அரசமரத்தூா், பீஞ்சமந்தை ஆகிய மலைக்கிராமங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரக்கணக்கானவா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.
நெக்கினி மலைக்கிராமத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சிறுசிறு கிராமங்களில் வீடு வீடாக நடந்து சென்று அனைவரும் தடுப்பூசி செலுத்திட அறிவுறுத்தினாா். மேலும், மலைக்கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், மக்களின் தேவைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தாா்.