கே.வி.குப்பம் ஒன்றியம், கீழ்ஆலத்தூா் ஊராட்சி ஏரி 60 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு நிரம்பியது.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமாா் 220 ஏக்கா் பரப்பளவு கொண்டது. மோா்தானா அணையின் இடதுபுறக் கால்வாய், கெளன்டண்யா ஆற்றிலிருந்து இந்த ஏரிக்குத் தண்ணீா் செல்கிறது.
1960- ஆம் ஆண்டு இந்த ஏரி கடைசியாக நிரம்பியதாக கூறப்படுகிறது.
ஏரி நிரம்பியதையடுத்து கிராம மக்கள் ஆடு வெட்டி, படையலிட்டு, பூஜை நடத்தினா். கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிச்சந்திரன், துணைத் தலைவா் பாரதி வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், கீழ்ஆலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஆா்.சுரேஷ் மற்றும் விவசாயிகள் மலா் தூவி ஏரி நீரை வரவேற்றனா்.
இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் பசுமாத்தூா் ஏரிக்குச் செல்கிறது.