வேலூர்: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக குறைந்த இடங்கள் மட்டுமே ஒதுக்குவது வேதனை அளிக்கிறது. வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை அடுத்து மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வேலூர் அமலேலுமங்கா புரத்தில் மக்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து பிரசார பயணத்தை தொடங்கி வைத்தார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாளுக்குநாள் விலைவாசி உயர்ந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் இதுதொடர்பாக மக்களிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார பயணம் நடத்தப்படுகிறது.
நீட் தேர்வு விரும்பும் மாநிலங்களில் நடத்திகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து அந்த மாநிலத்தின் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு அதிகளவு மழைபெய்துள்ளது. இதனால், தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும் குழு அனுப்பி ஆய்வு செய்துள்ளது.
இதற்கான இழப்பீடாக ஒரு பெருந்தொகையை முன்தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் மழைக்கால மீட்பு பணிகளில் தமிழக முதல்வர் வேகமாக செயல்பட்டு வருகிறார். வெள்ள நிவாரண பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பள்ளமான இடங்களில்தான் தண்ணீர் தேங்குகிறது. மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்து விடும். அதற்காக அரசை குறை கூறிவிட முடியாது.
வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். எனினும், இக்கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு மிகக்குறைந்த இடங்களை ஒதுக்குவது வேதனையளிக்கிறது. இருப்பினும் இம்முறை பேசி அதிக இடங்களை பெற முயற்சி மேற்கொள்வோம். சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கருத்து வேறுபாடு கிடையாது. இதில் பாரபட்சம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி கருதவில்லை. இதனால் எந்தவித பாதிப்பும் கிடையாது.
தமிழகத்தில் கம்பி, சிமெண்ட், மணல் உள்ளிட்ட பொருட்களின் கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விலையேற்றத்தை கட்டுபடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் கழிவுகளை எரிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் ஏற்படக் கூடிய ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் மத்திய அரசு உத்தரவை திரும்ப பெறுவதுடன், வேளாண்மை கழிவுகளை உரமாக மாற்ற நடவடிக்கை வேண்டும். இல்லையே நாடு முழுவதும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றார்.
அப்போது, கட்சியின் மாவட்டத்தலைவர் பி.டீக்காராமன், நிர்வாகிகள் ஏ.கோபி, எஸ்.எஸ்.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.