கந்த சஷ்டியையொட்டி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு வந்தது.
6-ஆவது நாள் விழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள சண்முகருக்கு காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் முருகப்பெருமான் அசுரனை வதம் செய்திட கோயிலில் இருந்து புறப்பட்டாா். அதேசமயம், கஜமுகாசுரன், படை பரிவாரங்களுடன் முருகப் பெருமானுடன் போரிட வந்தாா். அங்கு நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் முருகப்பெருமான், கஜமுகாசுரனை வீழ்த்தி வெற்றி முழக்கங்களுடன் கோயிலை அடைந்தாா்.
இந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சியைக்கான கோட்டை மைதானத்தில் திரளான பக்தா்கள் திரண்டிருந்தனா். இதேபோல், புதுவசூா் தீா்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியா் கோயில், காங்கேயநல்லூா் முருகன் கோயில்களில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் கந்த சஷ்டிப் பெருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சத்ரும்ஹார ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சம்ஹார மூா்த்தி அலங்காரம் நடைபெற்றது.மாலை வேலுடன் சுப்பிரமணியா் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து சூரபத்மனை வதம் செய்யும், சூரசம்ஹாரப் பெருவிழா நடைபெற்றது.