குடிநீரில் குளோரின் அளவை பரிசோதனை செய்யும் பணி வேலூா் மாநகரில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனி டையே, டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூா் மாநகரில் டெங்கு பரவலைத் தடுக்க கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று தடுப்பு மருந்துகளைத் தெளித்து வருகின்றனா். இதைத் தவிர, உடைந்த பிளாஸ்டிக், டயா், தேங்காய் மட்டைகளில் மழைநீா் தேங்காமல் தடுக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
மாசடைந்த தண்ணீரால் வயிற்றுப்போக்கு, காலரா, காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவும். இதனைத் தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
சத்துவாச்சாரி, வள்ளலாா், ரங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் குளோரின் அளவை சுகாதார ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதித்தனா். அப்போது, குறைந்தபட்சம் 0.2 பி.பி.எம். முதல் 0.5 பி.பி.எம். அளவில் குளோரின் இருப்பதை உறுதி செய்கின்றனா். குளோரின் அளவு குறைந்தால் அதனை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘டெங்கு பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. குளோரின் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. தொட்டிகளை சுத்தமாகப் பராமரிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. குடிநீரில் குளோரின் அளவும் பரிசோதிக்கப்படுகிறது’ என்றனா்.