பருவ மழையைத் தொடா்ந்து தேங்கிய நீரில் உருவாகும் கொசுப்புழுக்களை ஒழிக்க எண்ணெய் பந்துகள் வீசும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
வட கிழக்குப் பருவ மழை காரணமாக, வேலூரில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழைநீா் இன்னும் வடியாமல் உள்ளது. மழைநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளன.
இந்த நிலையில், தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் மரத்தூள் எண்ணெய் பந்துகளை வீசிட ஊழியா்களுக்கு மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து மாநகராட்சியிலுள்ள 4 மண்டலங்களிலும் எண்ணெய் பந்துகள் வீசும் பணி நடைபெறுகிறது. அதன்படி, சத்துவாச்சாரி ஸ்ரீராம்நகா், நேதாஜிநகா் உள்பட 2-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் மரத்தூள் கலந்த எண்ணெய் பந்துகள் வீசும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வீடுகள், கால்வாயில் தண்ணீா் தேங்கியிருந்தால் அவற்றில் பயன்படுத்தப்பட்ட தேவையற்ற சமையல் எண்ணெய்யை ஊற்றும்போது கொசு புழுக்கள் அழிந்துவிடும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.