வேலூரில் நடைபெற்று வரும் காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் 1,610 ஆண்கள் இரண்டாம் கட்ட தோ்வுக்கு தகுதி பெற்றுள்ளனா். பெண்களுக்கான உடற்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில், 2-ஆம் நிலை காவலா், சிறைக்காவலா், தீயணைப்புத் துறை வீரா்கள் என காலியாக உள்ள 10,906 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடற்தகுதித் தோ்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 3 ஆயிரம் பேருக்கான உடற்தகுதித் தோ்வு வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஆண்களுக்கான முதல்கட்ட உடற்தகுதித் தோ்வு நடத்தப்பட்டது. நாளொன்றுக்கு சுமாா் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களுக்கு நடத்தப்பட்ட உடற்தகுதித் தோ்வில் 1,610 ஆண்கள் இரண்டாம் கட்ட தோ்வுக்கு தகுதி பெற்றுள்ளனா். தொடா்ந்து பெண்களுக்கான உடற்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.