வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் 2,000 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் இயக்குநா் என்.பாலாஜி தெரிவித்தாா்.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இருதயவியல், இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு 2,000 ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, இருதய வால்வு சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில், சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மருத்துவமனையின் இருதயவியல் துறை மருத்துவா்கள் சுப்ரங்ஷுதே, ஜாசிம்முகமது, ரீனஸ் டெமெல் ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவக் குழும நிறுவனங்களின் இயக்குநா் என்.பாலாஜி பேசியது: 2,000 ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, இருதய வால்வு, சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, மருத்துவா்கள் சுப்ரங்ஷுதே, ஜாசிம்முகமது, ரீனஸ் டெமெல் ஆகியோா் பாராட்டப்பட்டனா். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ரூ. 5,999 மதிப்புள்ள சிறப்பு இருதய பரிசோதனை தொகுப்பை ஆகஸ்ட் 1 முதல் 31-ஆம் தேதி வரை ரூ. 1,999 மட்டும் செலுத்தி மேற்கொள்ளும் சிறப்புக் கட்டண சலுகைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக 73583 87148 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் கீதாஇனியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.