வேலூர்: அணைக்கட்டு பஜார் பிரதான சாலை விரிவாக்கம் செய்து சாலையின் மத்தியில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. அணைக்கட்டு பஜார் பிரதான சாலையில் ரூ. 40 லட்சத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் ஆய்வு செய்தார்.
எனினும், அங்கு மின் விளக்குகள் அமைக்கப்படாமல் இருந்ததால் இரவு நேரங்களில் வாகனங்கள் தடுப்புச் சுவர்களில் மோதி விபத்துக்குள்ளாகி வந்தன. இதைத் தவிர்க்கும் வகையில் தடுப்புச் சுவர்களின் மத்தியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், அங்கு உயர் மின் கோபுரங்கள் அமைத்துத் தர சென்னை ஆலந்தூர் எம்.பி. பாரதியிடம் வலியுறுத்தியிருந்தார்.
அதன்பேரில், ஆலந்தூர் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் அணைக்கட்டு பிரதான சாலையில் 27 உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் சனிக்கிழமை ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள கழிப்பறையை ஆய்வு செய்து, அங்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை வேறு இடத்தில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினர்.
மேலும், பொய்கை ஊராட்சி மோட்டூரில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் பயணிகள் நிழற்கூடத்தை பார்வையிட்டார். அப்போது, திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.