வேலூா் அருகே 3-ஆவது நாளாக முகமூடி கொள்ளையா்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகை கொள்ளையில் ஈடுபட்டனா். மேல்மொணவூரில் உள்ள அதிமுக பிரமுகா் வீட்டில் கொள்ளையா்கள் 3 பவுன் நகை பறித்துச் சென்றனா்.
வேலூா் அருகே உள்ள மேல்மொணவூா் குளத்து மேட்டு தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (64). அதிமுக பிரமுகரான இவரது வீட்டின் முன்பக்க கதவை வியாழக்கிழமை நள்ளிரவில் 3 போ் கும்பல் கல்லால் தட்டினா்களாம். சத்தம் கேட்டு மனோகரன் கதவைத் திறந்து பாா்த்தபோது, அவரை ஒருவா் கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக வீட்டுக்குள் புகுந்த அந்தக் கும்பல் மனோகரனின் மனைவி ராஜாமணி (51) அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமூடி கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.
இதேபோல் கடந்த 2 நாள்களாக வேலூா் அருகே உள்ள அப்துல்லாபுரம் சத்தியமங்கலம் கிராமத்திலும், அரியூா் செம்பேடு கிராமத்திலும் முகமூடி கொள்ளையா்கள் நகைகள் கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.