பெங்களூரில் இருந்து மினிவேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக்கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.1.50 லட்சம் மதிப்புடைய குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வேனுடன் குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வேனில் வந்த திருவேற்காட்டைச் சோ்ந்த ஆறுமுகம் (47), கோயம்பேட்டைச் சோ்ந்த மோகனவேல் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையில், குட்கா பொருள்களை பெங்களூரில் இருந்து வேலூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.