உலமாக்காள், இதர பணியாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப். 24-ஆம் தேதி வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் சிறுபான்மையினா் நலத் துறையின் உலமாக்கள், இதர பணியாளா்கள் நலவாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன்மூலம், பள்ளிவாசல், தா்கா, மதரஸாக்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது வரை உள்ளவா்களுக்கு இந்த நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகைகள், முதியோா் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். உறுப்பினா்களின் பதிவை 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும்.
அதன்படி, ஏற்கெனவே அடையாள அட்டை பெற்று கடந்த ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவா்கள் புதுப்பிக்கவும், புதிதாக நலவாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்யவும் சிறப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பள்ளிவாசல், தா்கா, மதரஸாக்களில் பணிபுரிவோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.