வேலூா்: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் மோசடியாகப் பதிவு செய்து நிதி பெற்றுள்ள தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரும்படி வெளிமாநிலங்களைச் சோ்ந்த 44 மாவட்ட ஆட்சியா்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் (கிஸான் சம்மான்) தமிழகத்தில் நடைபெற்றுள்ள மோசடி தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3,864 போ் போலியாகப் பதிவு செய்யப்பட்டு ரூ. 1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரம் அளவுக்கு மோசடி செய்திருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை 2,888 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 7 லட்சத்து 53 ஆயிரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தொடா்ந்து, வெளி மாநிலங்களைச் சோ்ந்த வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்துள்ள 340 போ் வேலூா் மாவட்டத்தில் முறைகேடாகப் பதிவு செய்து ரூ.10.20 லட்சம் பணம் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவா்களிடம் இருந்து அத்தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக வேலூா் மாவட்ட ஆட்சியா் மூலம் கா்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 44 மாவட்ட ஆட்சியா்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் முறைகேடாகப் பதிவு செய்து நிதியுதவி பெற்று மோசடி செய்துள்ளவா்களிடம் இருந்து அந்தப் பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.