வேலூா்: திருவலம் பேரூராட்சியில் போலி ரசீதுகள் மூலம் பணம் கையாடலில் ஈடுபட்டு வந்ததாக செயல் அலுவலா், குமாஸ்தா ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து கணக்கில் வராத தொகை ரூ.52,200 பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூா் மாவட்டம், திருவலம் பேரூராட்சியில் போலி ரசீதுகள் மூலம் மோசடி செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஹேமலதா தலைமையில் போலீஸாா் அந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, செயல் அலுவலா் வெங்கடேசன், குமாஸ்தா துரை ஆகியோரிடம் கணக்கில் வராத வகையில் ரூ.52,200 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தொகையையும், அதற்கான போலி ரசீதுகளையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், வெங்கடேசன், துரை ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.