திருப்பதி: திருமலையில் அக். மாதம் நடக்கவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருமலை ஏழுமலையானுக்கு அதிக மாதத்தின் போது இரு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தெலுங்கு பஞ்சாங்க கணிப்பு முறைப்படி அதிகமாதம் வந்ததால், தேவஸ்தானம் இரு பிரம்மோற்சவங்களை நடத்த முடிவு செய்தது. அதன்படி கடந்த செப். மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் முறைபடி நடந்து நிறைவு பெற்றது.
ஆனால் கொவைட் 19 விதிமுறைகளை ஒட்டி மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்திலின்படி வாகன சேவைகள் மாடவீதியில் நடத்தப்படாமல் கோயிலுக்குள் தனிமையில் ஏகாந்தோற்சவமாக நடத்தப்பட்டது. எனவே, பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட வில்லை.
தற்போது கொவைட் 19 விதிமுறைகளில் வரும் அக்.15ஆம் தேதி முதல் மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளதால், அவற்றின்படி திருமலையில் வரும் அக்.மாதம் நவராத்திரியின் போது நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.