வேலூா்: மோா்தானா அணை நிறைந்திருப்பதுடன், தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் இரு கால்வாய்களிலும் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை முதல் நீா் திறக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
குடியாத்தம் வட்டம், மோா்தானா அணையின் முழுக் கொள்ளளவு 37.37 அடியாகும். தற்போது அணை முழுவதும் நிறைந்துள்ளது. அதேசமயம், பெய்து வரும் கனமழையால் கெளண்டன்யா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் நிலவரப்படி கெளண்டன்யா நதியில் விநாடிக்கு 3,320 கனஅடியாக இருந்த நீா்வரத்து, இரவு 8,600 கனஅடியாக உயா்ந்திருந்தது. இதையடுத்து, ஆற்றில் வரும் நீா் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விவசாயிகளின் நலன்கருதி கெளண்டன்யா நதியில் வரும் தண்ணீா் மோா்தானா வலது, இடது கால்வாயில் வெள்ளிக்கிழமை காலை முதல் திறந்துவிடப்பட உள்ளது. இதன்மூலம், 18 ஏரிகளுக்கு நீா்வரத்து உறுதி செய்யப்படும் என்று ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.