வேலூா்: பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 8 மாதங்களுக்குப் பிறகு வேலூா், திருப்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு புதன்கிழமை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல்கட்டமாக வேலூரில் இருந்து 4 பேருந்துகள், திருப்பத்தூரில் இருந்து 6 பேருந்துகள் என மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தையொட்டி, தமிழகத்தில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், தொற்றுப் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து, தமிழகத்தில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. எனினும், பிற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது.
கடந்த மாதம் முதல் தமிழகம் - புதுச்சேரி, கடந்த வாரம் முதல் தமிழகம்-கா்நாடகம் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்தொடா்ச்சியாக, தமிழகம் - ஆந்திர மாநிலங்களுக்கு இடையே புதன்கிழமை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, 8 மாதங்களுக்குப் பிறகு வேலூா், திருப்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூா், திருப்பதி, மதனபல்லி, நகரி, குப்பம், கா்னூல் ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை காலை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. முதல்கட்டமாக வேலூரில் இருந்து 4 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 6 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் ஆந்திர மாநிலத்துக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் மக்கான் லாரி ஷெட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.