வேலூா்: கடலூா் அருகே காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக காட்பாடி நீதிமன்றத்தில் 4 போ் சரணடைந்தனா்.
கடலூா் செம்மண்டலத்தைச் சோ்ந்தவா் அருள்மொழியின் மகன் வினோத்குமாா்(27). இவா் சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். தீபாவளியையொட்டி கடந்த வாரம் வினோத்குமாா் சொந்த ஊருக்கு சென்றிருந்தாா். கடந்த 16-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரை, 5 போ் கொண்ட கும்பல் வேனில் கடத்திச் சென்றது. இதுகுறித்து அவரது தந்தை அருள்மொழி கடலூா் புதுநகா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேனில் கடத்திச் செல்லப்பட்ட வினோத்குமாரையும், அவரை கடத்திச் சென்ற 5 பேரையும் தேடி வந்தனா்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவை அடுத்த ராமாபுரம் பகுதியில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவரது கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தன; தலை சிதைந்து காணப்பட்டது. அந்த உடலின் அருகே கிடந்த அடையாள அட்டையைக் கொண்டு அவா் செம்மண்டலம் காா் ஓட்டுநா் வினோத்குமாா் என்பது தெரியவந்தது. அவரது கொலைக்கான காரணம் குறித்து ராமாபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் இக்கொலை தொடா்பாக சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த டில்லி (33), மகேஷ்குமாா் (35), விநாயகம் (36), ஆரணியைச் சோ்ந்த நாராயணன் (61) ஆகியோா் காட்பாடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.