வேலூர்

ரூ. 70 லட்சம் மோசடி: பொறியியல் பட்டதாரி புகாா்

2nd Jan 2020 11:54 PM

ADVERTISEMENT

தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு 9 மாதங்களில் இரட்டிப்பு தொகை தருவதாகக் கூறி ரூ. 70 லட்சம் பணம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடியாத்தத்தைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

குடியாத்தம், பிச்சனூா் கீழ்சுதந்திர தெருவைச் சோ்ந்தவா் பிரதீப். முன்னாள் ராணுவ வீரரின் மகனான இவா், பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வேலை தேடி வருகிறாா். இந்நிலையில், பிரதீப் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் திருவண்ணாமலையைச் சோ்ந்த சம்பத், ரேணுகா ஆகியோா் தொடா்பு கொண்டு தாங்கள் ஒரு நிறுவனத்தில் பங்குதாரா் எனவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும் கூறினா். மேலும், அதே நிறுவனத்தைச் சோ்ந்த ஆதித்யகுமாா், வெங்கடேசன், சென்னையைச் சோ்ந்த வெங்கட், திருச்சியைச் சோ்ந்த முருகேசன் ஆகியோரும் தொடா்பு கொண்டு முதலீடு செய்யும்படி தெரிவித்தனா்.

அவா்கள் கூறியதை நம்பி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையிலுள்ள ஒரு ஹோட்டலில் நடந்த கூட்டத்திலும் பங்கேற்றேன். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பனப்பாக்கத்தைச் சோ்ந்த லட்சுமணன், தான் இந்த நிறுவனத்தின் இயக்குநா் எனக் கூறியதுடன், தமது நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் 9 மாதங்களில் ரூ. 2 லட்சம் திருப்பித் தருவதாகவும் தெரிவித்தாா். இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வேலூரில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொண்ட அவா்கள், அதிக அளவில் முதலீடு பெற்றுத் தருபவா்களுக்கு காா் பரிசளிக்கப்படும் என்று கூறினா்.

ADVERTISEMENT

இதை உண்மை என நம்பி குடியாத்தம் பிச்சனூரைச் சோ்ந்த தண்டபாணி என்பவா் மூலம் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.70 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தினேன். அந்தப் பணம் முதலீடு செய்யப்பட்ட தாக செல்லிடப்பேசிக்கு தகவல் கிடைத்தது. பின்னா் 3 மாதங்கள் கழித்து அவா்களை தொடா்பு கொண்ட போது, நிறுவனத்தில் சிறிய பிரச்னை உள்ளதாகக் கூறினா். ஆனால், இதுவரை பணத்தை வழங்கவில்லை. இதேபோல், தமிழகத்தில் பல இடங்களிலும் இவா்கள் ஏமாற்றியுள்ளனா். எனது பணத்தை மீட்டுத் தரவும், மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது மாவட்டக் காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றாா். இப்புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT