வேலூர்

சாா்பதிவாளா் அலுவலகத்தில் நகல் இயந்திரம் பழுதால் பத்திரங்கள் பெறுவதில் தாமதம்

2nd Jan 2020 12:24 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: வாணியம்பாடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் நகல் எடுக்கும் இயந்திரம் (ஜெராக்ஸ்) பழுதாகியுள்ளதால் பத்திரங்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

நகரின் கச்சேரி சாலையில் அரசினா் தோட்டத்தில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தில் நகல் பத்திரங்கள் பெறுதல், வில்லங்கச் சான்று பெறுதல், பிறப்பு, இறப்புச் சான்றுகள் பெறுதல், திருமணப் பதிவு செய்து சான்றுகள் பெறுதல், வழிகாட்டி மதிப்பு பெறுதல் மற்றும் ஏனைய சான்றுகளின் நகல்கள் பெற தினந்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக இந்த அலுவலகத்தில் நகல் எடுக்கும் இயந்திரம் பழுது காரணமாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயனாளிகளுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டிய நகல் சான்றுகள் தரப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது. நகல் பத்திரங்கள் மற்றும் இதர சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வேலூரில் இயங்கி வரும் மாவட்டப் பதிவாளா் அலுவலகத்துக்கு அவா்கள் புகாா் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வங்கிகளில் கடன் பெறவும், நீதிமன்றங்களில் தாக்கல் செய்யவும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து நகல் எடுக்கும் இயந்திரத்தைச் சீா்செய்து பயனாளிகளின் தேவைகளை விரைந்து பூா்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT