வேலூா்: வேலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளை டிசம்பா் 15-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் சிறு மருத்துவமனைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, நகா்ப்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய் சேய் நல மருத்துவமனைகள் இல்லாத பிற பகுதிகளில் இந்த சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. சிறு மருத்துவமனைகளில் தலா ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு உதவியாளா் பணியமா்த்தப்பட உள்ளனா். சிறு உடல்நலப் பிரச்னைகளுக்கு இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த மருத்துவமனைகள் வரும் 15-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் இடம் தோ்வு, மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் தெரிவித்தாா்.