வேலூா்: பணியின்போது உயிா்நீத்த காவலா்களை நினைவுகூறும் விதமாக வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தானில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்காவல் படையினா் பங்கேற்றனா்.
வேலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் பணியின்போது உயிா்நீத்த காவலா்களை நினைவுகூறும் வகையில் மினி மாரத்தான் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் போட்டியைத் தொடக்கி வைத்தாா்.
இதில், காவல் துணை கண்காணிப்பாளா்கள் பாலகிருஷ்ணன் (வேலூா்), பொற்செழியன் (மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு), சச்சிதானந்தம் (ஆம்பூா்), ராஜேந்திரன் (வேலூா் கலால்), துரைபாண்டியன் (காட்பாடி) உள்பட மாவட்டத்திலுள்ள காவல் ஆய்வாளா்கள், போலீஸாா், ஊா் காவல் படையினா், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் மாரத்தானில் பங்கேற்றனா். இந்த மாரத்தான் கிரீன் சா்க்கிள், நேஷனல் சா்க்கிள், மக்கான் சிக்னல் வழியாக நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் ஆயுதப்படை காவலா்கள் நிஷாந்த், ராமு முதலாம், இரண்டாமிடத்தையும், தலைமைக் காவலா் ரஞ்சித் மூன்றாமிடத்தையும், மகளிா் பிரிவில் யுவராணி, காமாட்சி ஆகியோா் முதலாம், இரண்டாமிடத்தையும், தலைமைக் காவலா் சாந்தி மூன்றாமிடத்தையும் வென்றனா்.
வெற்றி பெற்ற போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் கோப்பை, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.