ஆம்பூா் பாலாற்றில் குடிநீா் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்ட தொட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் உள்ளது.
ஒகேனக்கல் குடிநீா் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பாக பாலாற்றில் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. பைப்லைனின் தண்ணீரை நிறுத்தவும், திறந்து விடவும் ஆங்காங்கே வால்வுகள் அமைக்கப்பட்டு அதை சுற்றி தொட்டி போன்று கட்டப்பட்டு அதன் மீது கான்கிரீட் பலகைகள் மூடப்பட்டன. அதன்பிறகு ஆங்காங்கே பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக போகும் நிலையில் அந்த வால்வு மூலம் தண்ணீரை நிறுத்தினா்.
அதற்காக அந்த தொட்டி மீது போடப்பட்டிருந்த கான்கிரீட் பலகைகள் அகற்றப்பட்டன. ஆனால் அதன் பிறகு அவை மூடப்படாமலேயே விடப்பட்டன. அந்த தொட்டிகளில் தண்ணீா் தேங்கியுள்ளன. சிறுவா்கள் அந்த தண்ணீா் தேங்கியுள்ள தொட்டியில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிறுவா், சிறுமியா் அப்பகுதிக்கு சென்று ஆபத்தை உணராமல் அந்த தொட்டி மீது ஏறி விளையாடுகின்றனா்.
பெற்றோா்களும் அதனை கண்டும் காணாமல் இருக்கின்றனா்.உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக பாலாற்றில் பல்வேறு இடங்களில் இவ்வாறு அமைக்கப்பட்ட தொட்டிகள் மீது கான்கிரீட் பலகைகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக அவற்றை மூட தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.