வேலூர் மாநகராட்சிப் பகுதியில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி 30-ஆவது வார்டு பிடிசி சாலை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரை அடுத்து மாநகராட்சி அலுவலர்கள், அப்பகுதியில் பள்ளம்தோண்டி உடைப்பு ஏற்பட்டிருந்த குழாயைச் சீரமைத்துச் சென்றனர். எனினும், குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பிடிசி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், வடக்கு போலீஸார் அங்கு சென்று குடிநீர் விநியோகத்தை சீர்படுத்துவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.