ஜோலார்பேட்டையில் பூட்டிய வீட்டை உடைத்து 62 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஜோலார்பேட்டை எம்.எம். ரெட்டி தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோதீஸ்வரன்(45). அவர், கர்நாடக மாநிலம், மைசூருக்கு சென்று விட்டு திங்கள்கிழமை காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பார்த்தபோது, அறையிலிருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அவற்றில் இருந்த 62 சவரன் நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக ஜோதீஸ்வரன், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், டிஎஸ்பி தங்கவேல், காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு வீடு முழுவதும் சோதனையிடப்பட்டது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர். இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.