வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவி பேட் கருவி, கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை பெல் நிறுவனப் பொறியாளர்கள் திங்கள்கிழமை முதல் ஆய்வு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குச் சீட்டு கருவி-3,853, கட்டுப்பாட்டுக் கருவி-1,919, விவி பேட் கருவி-2,099 ஆகியவை வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அந்த இயந்திரத்தில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பதிவுகளை அழித்துவிட்டு, தற்போதைய தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக முதல் நிலை ஆய்வு மேற்கொள்ள பெல் நிறுவனப் பொறியாளர்கள் 30 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் முதல்நிலை ஆய்வுப் பணி திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.