ஜோலார்பேட்டை அருகே சிறுவன் உள்பட 2 பேர் கொலை வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
வெலக்கல்நத்தம் பகுதியில் கடந்த மாதம் 12-ஆம் தேதி 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த கார்த்திக் (22), பாலாஜி (23) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியது: நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் துப்புரவுப் பணியாளரான கார்த்திக் (22), அவரது நண்பர் பாலாஜி (23) ஆகிய இருவரும் ஓரினச் சேர்க்கை பழக்கமுடையவர்கள்.
இந்நிலையில் வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (19) மற்றும் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகியோரின் சடலங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் தண்டவாளம் அருகே மீட்கப்பட்டன. பிரேதப் பரிசோதனை முடிவில் இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதில் ஆனந்தனின் செல்லிடப்பேசியை ஆய்வு செய்ததில் கார்த்திக்குடன் வெகு நேரம் பேசியது தெரியவந்தது.
மேலும், கார்த்திக், பாலாஜி ஆகிய இருவரும் ஆனந்தன் மற்றும் 14 வயது சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு இருவரையும் கொலை செய்ததது தெரியவந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் சுற்றித் திரிந்த கார்த்திக், பாலாஜியை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.