ஆம்பூர் பகுதி ஆசிரியர்களுக்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை சார்ந்த தகவல்களை ஆசிரியர் நெட் மற்றும் தமிழ்நாடு டிஜிட்டல் டீம் என்ற இணைய தளங்கள் வெளியிடுகின்றன. இந்த இணையதளங்கள் சார்பாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக கல்வி வழங்கும் சிறந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்கின்றனர். அவர்களுக்கு "ஒளிரும் ஆசிரியர்கள்' என்ற விருது வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு இவ்விருதுகளை வழங்கினார். இதில் மாதனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். தட்சிணாமூர்த்தி, ஹபிபுல்லா ரூமி, கே.சேகர், கே.ஜெயசீலன், இ.சிவசங்கர், ஆர்.பரிமேலழகர் ஆகியோர் விருது பெற்றனர்.