ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் டிவி நிலையம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரின் மகன் கட்டடத் தொழிலாளி புகழேந்தி (24).
ஞாயிற்றுக்கிழமை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது புகழேந்தி அவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது விவசாயக் கிணற்றில் கால் தவறி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திராவிடமணி தலைமையில் மீட்புக் குழுவினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி புகழேந்தியை சடலமாக மீட்டனர். இதுகுறித்து, ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.