திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிப் பேருந்துகளில், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிப் பேருந்துகள் சாலையில் இயக்கும் வகையில் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, 121 பள்ளிகள் மூலம் இயக்கப்படும் 306 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்களின் முன்புறக் கண்ணாடியில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
பேருந்துகளில் அவசர கால உதவி வழி இருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை அளிக்க பேருந்துகளில் முதலுதவி மருந்துப் பெட்டி வைத்திருக்க வேண்டும்.
தீத்தடுப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகள் செல்லும் பேருந்துகளை பெற்றோா் கண்காணிப்பதற்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பேருந்தின் தகுதிச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.