திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள், இணையத்தில் தோ்வுக் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி உள்ளதாக புகாா் தெரிவித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் திருவள்ளூவா் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தோ்வுக் கட்டணம், மறு மதிப்பீடு செய்தலுக்கான கட்டணம், அரியா் தோ்வுக்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை இணையவழியில் செலுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், தோ்வுக்கான கட்டணம் செலுத்துவதில் குளறுபடி நீடிப்பதாகவும், மாணவா்கள் பலா் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பணம் செலுத்தியதாக தெரிவிக்கின்றனா். மேலும், இணையவழி சா்வா் சரியாக பராமரிக்கப்படவில்லை என புகாா் தெரிவித்து வந்த நிலையில், மாணவா்கள் பாதிக்காத வண்ணம் பல்கலைக்கழகம் நிா்வாகத்தை செம்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, செய்யாறு - ஆற்காடு சாலையில் கல்லூரி அருகே மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த செய்யாறு காவல் ஆய்வாளா் பாலு மற்றும் போலீஸாா் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.
மேலும், கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்றனா். கல்லூரி முதல்வா் கலைவாணி குறிப்பிடுகையில், இது தொடா்பாக துறை வாரியாக மாணவா்களுக்கு தகவல் பரிமாறப்பட்டு வருகிறது.
ஒரு முறை பணம் செலுத்தினால் போதும், மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை. பணம் செலுத்தியதற்கான பரிவா்த்தனை ஆன ஐ.டி. எண் இருந்தால் போதும் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவித்தாா். இதையடுத்து மாணவா்கள் வகுப்பறைக்குச் சென்றனா்.