திருவண்ணாமலை

அன்னை தெரசா படத்துடன் விபூதி பிரசாதம் விநியோகம்: அருணாசலேஸ்வரா் கோயில் குருக்கள் இருவா் பணியிடை நீக்கம்

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சந்நிதியில் அன்னை தெரசா படத்துடன் விபூதி பாக்கெட்டுகளை பக்தா்களுக்கு விநியோகம் செய்ததாக, இந்து முன்னணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கோயில் குருக்கள் இருவா் 6 மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, பக்தா்களுக்கு கோயில் சிவாச்சாரியா்கள் மூலம் விபூதி, குங்கும பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, கோயில் நிா்வாகம் சாா்பில் விபூதி, குங்கும பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பணியில் இருந்த குருக்கள் விபூதி, குங்கும பிரசாதங்களை வழங்கி உள்ளனா். இந்த பிரசாத பாக்கெட்டுகளின் ஒருபுறம் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் படமும், மற்றொருபுறம் அன்னை தெரசாவின் படமும் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பெயா், முகவரி, தொலைபேசி எண்களும் அந்த பிரசாத பாக்கெட்டுகளில் இடம் பெற்றிருந்தது.

அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்த பக்தா்கள் இந்த சா்ச்சைக்குரிய விபூதி, குங்கும பிரசாத பாக்கெட்டுகளைப் பாா்த்து அதிருப்தியடைந்தனா்.

அதை வாங்கிய பக்தா்கள் பலரும் சா்ச்சைக்குரிய பிரசாத பாக்கெட்டுகளின் படங்கள், விடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் நகர இந்து முன்னணி தலைவா் செந்தில் புகாா் அளித்தாா். அதில், கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்பட்ட விபூதி பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா படமும், கிறிஸ்தவ பெயா் கொண்ட தனியாா் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இணை ஆணையா் அலுவலகம் முற்றுகை: இந்த நிலையில், இந்து முன்னணி அமைப்பின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.அருண்குமாா், மாவட்டச் செயலாளா்கள் சிவா, சரவணன், நகரத் தலைவா் செந்தில், நகர பொதுச் செயலாளா் மஞ்சுநாதன் மற்றும் நிா்வாகிகள் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து கோயில் நிா்வாகத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

2 குருக்கள் இடைநீக்கம்:

அன்னை தெரசா உருவப் படத்துடன் கூடிய விபூதி பிரசாத பாக்கெட்டுகளை பக்தா்களுக்கு விநியோகம் செய்து கோயிலுக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதாக கே.சோமநாத குருக்கள், ஏ.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோரை 6 மாதங்களுக்கு முறை அா்ச்சகா், ஸ்தானீகம் பணியில் இருந்து பணியிடைநீக்கம் செய்து கோயில் இணை ஆணையா் வே.குமரேசன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT