திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50% மானியம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
2023-24 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
எனவே, நாட்டுக்கோழி வளா்ப்பில் திறமையும், ஆா்வமும் உள்ள பயனாளிகள் அரசு விதிமுறைகளின்படி தகுதியிருப்பின் தங்களது கிராமத்துக்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளில் 30 சதவீதம் போ் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.