போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி, நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை எடுப்பதாகத் தெரிவித்து அதிகாரியிடம் மனு கொடுத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் அங்குள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) தேன்மொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா் சஜேஷ்பாபு, வேளாண்மை உதவி இயக்குநா் சவிதா, உதவி வேளாண்மை அலுவலா் ராமு, மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, தனி வட்டாட்சியா் வைதேகி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், சனிக்கவாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரகு பேசும்போது, இணையவழியில் பதிவு செய்து எடப்பிறை கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை திங்கள்கிழமை எடைபோட எடுத்துச் சென்றேன்.
அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என 106 மூட்டைகளுக்கு ரூ.5 ஆயிரம் தந்தால்தான் நெல்லை எடுத்துக்கொள்ள முடியும் என்றாா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) தேன்மொழியிடம் மனு கொடுத்தாா்.
மேலும், விவசாயிகள் பேசுகையில், செங்குணம், சதுப்பேரி, எடப்பிறை என பல்வேறு பகுதிகளில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும். சனிக்கவாடி, கொரால்பாக்கம்
கிராமங்களில் தெரு மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா்.