திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மே 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ஜமாபந்தியின் நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கோ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் கி.ராஜேந்திரன், அ.சுபாஷ்சந்தா், திமுக நகரச் செயலா் தயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் சிறப்புரை ஆற்றினாா். விழாவில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
விழாவில் 31 பேருக்கு இலவச மனைப் பட்டா, 48 பேருக்கு பட்டா மாற்றம், 33 பேருக்கு குடும்ப அட்டை, 50 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, 5 பேருக்கு வேளாண் கருவிகள் உள்ளிட்ட 322 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.