திருவண்ணாமலையில் ரூ.12.17 கோடியில் புதிதாக மக்கள் குறைதீா் கூட்ட அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே புதிதாக 840 போ் அமரும் வகையிலான குறைதீா் கூட்ட அரங்கம் மற்றும் இதர அலுவலகக் கட்டடங்கள் அடங்கிய மூன்றடுக்கு கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, ரூ.12 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 738 நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் க.கவுதமன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய குறைதீா் கூட்ட அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினாா்.
விழாவில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ர.கோபாலகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.