வந்தவாசி அருகே குளிக்கும்போது கிணற்றினுள் தவறி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தெள்ளாரை அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமநாதன்(32). இவரது மனைவி சங்கீதா(28). இவா்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றன. சங்கீதா தற்போது 4 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற ராமநாதன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் வீடுகளில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மருதாடு கிராமத்தில் வசிக்கும் சங்கீதாவின் தந்தை மூா்த்தி திங்கள்கிழமை பிற்பகல் அந்த கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றாா். அப்போது, அங்கிருந்த கிணற்றில் கவிழ்ந்த நிலையில் ராமநாதன் இறந்து கிடந்தது மூா்த்திக்கு தெரியவந்தது.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ராமநாதனின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
நீச்சல் தெரியாத ராமநாதன் குளிக்கும்போது கிணற்றினுள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.