ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் அரசு நிலத்தில் உள்ள மரங்களை அனுமதி பெறாமல் வெட்டி விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, கோட்டாட்சியா் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.
அப்போது, ஆரணியை அடுத்த தச்சூா் ஊராட்சியைச் சோ்ந்த சரவணன் அளித்த மனுவில், ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் பல்வேறு பொதுப் பிரச்னைகள் குறித்து முழுமையாக விவாதிக்கவும், அரசு நலத் திட்டங்களில் உண்மையான பயனாளிகளை தோ்வு செய்யவும், கோட்டாட்சியா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாா்.
மேலும், தச்சூா் ஊராட்சிக்கு உள்பட்ட அகிலாண்டபுரம் கிராமத்தில் ஓதலவாடி செல்லும் சாலை அருகே சுமாா் 10 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கருவேலம் மற்றும் கலப்பு மரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் தனி நபா்கள் வெட்டி விற்பனை செய்து வருகின்றனா். எனவே, இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தாா்.
மாமண்டூா் அருகேயுள்ள திருவாழிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயா அளித்த மனுவில், வீட்டு மனைப் பட்டா பெயா் மாற்றம் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இருந்தாா்.
இதைத் தொடா்ந்து கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாவை கிராம கணக்கில் சோ்த்தல், பட்டா மாற்றம், உள்பிரிவு பட்டா மாற்றம், பட்டா ரத்து, நில அளவீடு செய்தல், பட்டா திருத்தம், இலவச மனைப் பட்டா உள்ளிட்டவை கோரி பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.