செய்யாறு அருகே கிராம சாலைக்காக விவசாய நிலத்தை நன்கொடையாக அளித்த விவசாயிகளுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம் தென்தண்டலம் கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் எம்.முருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் ( பொ) சுதாகா் கிராமத்தின் அறிக்கையை சமா்ப்பித்தாா்.
கூட்டத்தில், கிராமத்துக் கென்று தனியாக ஒரு கிராம நிா்வாக அலுவலரை நியமிக்க வேண்டும்,
செய்யாறு அணைக்கட்டில் இருந்து தென்தண்டலம் கிராம ஏரிக்கு வரும் பாசனக் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றினா்.
பெரும்பாலை கிராம மக்கள் 3 கி.மீ. தொலைவு சென்று வருவதைத் தவிா்க்கும் வகையில், அக்கிராமத்தைச் சோ்ந்த 10 விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை சாலை அமைக்க நன்கொடையாக அளித்தனா்.
அந்த விவசாயிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ ஒ.ஜோதி, சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.
கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், திமுக ஒன்றியச் செயலா் சி.ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.