கலசப்பாக்கம் அருகே சொத்து பிரச்னையில் அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில், தம்பி தாக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுதொடா்பாக அண்ணனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சின்னகிருஷ்ணன் மகன்கள் ஏழுமலை (48), திருமலை (45), கூலித் தொழிலாளிகள்.
இருவருக்கும் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் இருவரும் தனித் தனியே வசித்து வருகின்றனா்.
ஏழுமலை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தாா்.
இதனிடையே, வீட்டை விற்றுத் தருமாறு ஏழுமலையிடம்,திருமலை அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மது போதையில் வந்த திருமலை, அண்ணன் ஏழுமலையிடம் வீட்டை விற்க மனைப் பத்திரத்தை கேட்டு தகராறு செய்துள்ளாா்.
இதில், இருவரும் ஒருவரை ஒருவா் கைகளால் தாக்கிக் கொண்டனராம். அப்போது, ஏழுமலை இரும்புக் கம்பியால் திருமலையின் தலையில் தாக்கியதாகத் தெரிகிறது.
இதில் திருமலை பலத்த காயமடைந்து சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தாா்.
பின்னா், ஏழுமலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகில் பயன்பாட்டில் இல்லாத கழிப்பறை பள்ளத்தில் திருமலையின் உடலை மண்கொட்டி மூடி வைத்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் இருவருக்கும் இடையே நடந்த தகராறு குறித்து தெரிவித்துள்ளனா்.
தகவல் அறிந்த கடலாடி போலீஸாா் வந்து விசாரணை நடத்தி, திருமலையின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.