செங்கம் நகரில் அதிக சுமை ஏற்றிச் செல்லும் லாரிகளால் புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் துக்காப்பேட்டை முதல் திருவள்ளுவா் நகா் வரை, போளூா்-செங்கம் சாலையில் புதிய பேருந்து நிலையம் முதல் செங்கம் - செய்யாறு மேம்பாலம் வரை, திருவண்ணாமலை மக்களவைத் உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலையின் நடுவே எல்.இ.டி. விளக்குகள் கொண்டு புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து, நகரில் அடிக்கடி இரவு நேரங்களில் சாலை தடுப்புச் சுவா்களின் வாகனம் மோதி விபத்துகள் நடைபெற்று வந்தது குறைந்தன. இதற்கு பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வரவேற்பு தெரிவித்தனா்.
இந்த நிலையில், மூன்றே மாதங்கள் ஆன நிலையில் தற்போது கரும்பு, வைக்கோல் ஏற்றி வரும் லாரிகள் அதிவேகமாக கவனக்குறைவாக இயக்கப்பட்டு மின் கம்பங்கள் மீது மோதி கம்பங்களை பழுதாகி வருகின்றன.
எனவே, போலீஸாா் மின் கம்பம் மீது மோதும் வானம் மீது வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.