திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் ஆடு வியாபாரிகள் இருவா் பலியாகினா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் எல்லப்பப் பிள்ளை (75). இவரது நண்பா் உத்திரமேரூா் வட்டம்,
மானாமதி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (42). இருவரும் ஆடு வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், இருவரும் வியாபார விஷயமாக திங்கள்கிழமை காலை காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் உள்ள நெடுங்கல் கிராம பேருந்து நிறுத்தம் அருகே பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது, சுங்குவாா்சத்திரத்தில் இருந்து பொன்னூா் நோக்கி தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற தனியாா் நிறுவன பேருந்து இவா்கள் மீது மோதியது.
இதில், எல்லப்பப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு கோவிந்தராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநா் வந்தவாசியை அடுத்த கீழ்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் (42) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.