வந்தவாசி அருகே வாரிசு சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிா்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பூங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் மனைவி விஜயா. இவா் 2010 ஏப்ரல் 27-ஆம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தாா். இதன் பிறகு வாரிசு சான்று கோரி அவரது கணவா் இளங்கோவன் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.
மனுவை பரிசீலித்த பூங்குணம் கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியன், விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் இளங்கோவன் புகாா் கொடுத்தாா். போலீஸாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2010 ஆகஸ்ட் 2-ஆம் தேதி, அலுவலகத்தில் இருந்த கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியனிடம் வழங்கினாா். அப்போது மறைந்திருந்த போலீஸாா் சுப்பிரமணியனை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சனிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூா்த்தி, குற்றம் சுமத்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.